கோஹ்லியும் கோழியும்

L. கார்த்தி என்ற பால்ய நண்பன் அவன் வீட்டில் எனக்கு மட்டும் ஸ்பெஷல் அனுமதி உண்டு! அவன் வீட்டு கருப்பு வெளுப்புத் திரை தொலைக் காட்சிப்பெட்டியில் ஒரு உலகக்கோப்பை நேரத்தில் கிரிக்கெட் அறிமுகம். எந்த ஆண்டு உலகக்கோப்பை என்று சொல்லமாட்டேன். அவன் புண்ணியத்தில்தான் கொஞ்சம் அடிப்படை ஆட்ட விதிகளைக் கற்றுக்கொண்டு என்னுடைய கிரிக்கெட் ரசிக வாழ்க்கை தொடங்கியது. கிரிக்கெட் தெரிந்த அளவு நூறில் ஒரு பங்கு கூட மற்ற விளையாட்டுகள் பற்றித் தெரியாது. அந்தக் கோப்பைக்குப் பிறகு ஓரிரு வருடங்கள் கிட்டத்தட்ட எல்லா தொடர்களையும் ரங்கநாதன் என்ற கல்லூரி கால நண்பன் வீட்டிலேயே கண்டு களிக்கலாயினேன். 

தொடர் தோல்விகள். அக்காலகட்டங்கில் இந்தியா எதோ ஒரு ஆட்டத்தில் வெல்வதே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. என்றாவது ஒருநாள் வெல்லும் என்ற ஏக்கம் இருக்கும். அதற்குப் பிறகான காலகட்டங்களில் பல சுவாரசியமான தொடர் வெற்றிகள் மற்றும் சச்சின், திராவிட், லக்ஷ்மன் போன்றவர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் என்று புள்ளி விபரங்கள் கூட அத்துப்படியாக இருந்தது. 

இந்திய அணியின் மீது பெரிதாக  எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த 2003 உலகக்கோப்பையில் இந்தியா இறுதிவரை சென்று தோற்றது கூட பெரிய விஷயமாகத் தெரியாத கௌரவமான தோல்வி!2002 ல்  நாட்வெஸ்ட் தொடர் பதிவு ஓட்ட விரட்டல் (Record run chase) மற்றும் 2003 உ.கோ இரண்டாமிடம். அதற்குள் அலுத்துவிட்டது. அதன்பிறகு உலககோப்பைக்கு உலகக்கோப்பை மட்டும் தேர்ந்த  சில ஆட்டங்களை  பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டேன்.     

ஆனால் சென்ற வருடம், இங்கு வருட இறுதியில், குளிர்காலத்தில், சேர்ந்தாற்போல் ஒரு வாரம் விடுமுறை வரும். அதில் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கொலம்பஸுக்கு ஒரு நண்பர் வீட்டிற்கு விருந்தினராகச்சென்று Boredom காரணமாக இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பார்க்கத் தொடங்கினேன். இதுவரை நான் காணாத Heroics எல்லாம் அந்த தொடரில் காண முடிந்தது. ஷுப்மான் கில், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், ரிஷப் பந்த் , முகமத் சிராஜ் என்று ஒருவரை ஒருவர் மிஞ்சும் செயல்திறன்  , அதி தீவிர அர்ப்பணிப்பு உணர்வு  என்று ஒரு மறக்க முடியாத தொடராகஅமைந்தது மட்டுமல்லாமல்  பல வருடங்களுக்குப் பிறகு எனக்கு கிரிக்கெட் பார்க்கும் ஆசையைத்தூண்டியது.  

அதன்காரணமாக ஸ்லிங்கில் WC T20 பார்க்க உட்கார்ந்தால், பாகிஸ்தானிடம் போராடி வீழ்ந்திருந்தால் பரவாயில்லை. ஏதோ சிங்கத்தின் குகையில் நுழைந்த ஆட்டைப்போல் நடுநடுங்கி வெலவெலத்து ரோஹித் ஷர்மா விக்கெட் விழுந்தவுடன் 90s இல் சச்சின் அவுட்டானதும் மொத்தமும் சீட்டுக்கட்டு சரிவதைபோல் சரியும் அந்த மாதிரி அஸ்திவாரம் ஆட்டம்கண்டது. நல்லவேளை பழைய காலத்து அசார் மாதிரி கோஹ்லி வந்து கொஞ்சம் மானத்தைக் காப்பாற்றினார். மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை 

151 என்பது ஒன்றும் அவ்வளவு மோசமான ஸ்கோர் கிடையாது கொஞ்சமாவது போராடியிருக்கலாம். அடக்கிறுக்கர்களா சமியின் ஃபார்மைத் திட்டுங்கடா என்றால் அவர் முசுலீம் என்பதைப் பிடித்துக்கொண்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள். நாம் பாகிஸ்தானோடு ஒரு காலத்தில் உலகக்கோப்பை தவிர மற்ற எப்போதுமே பொதுவாக ஜெயித்ததில்லை அப்போதுகூட ஒரு முறை கூட அசாரை முஸ்லீம் என்பதற்காகத் திட்டியதில்லை. பவுலிங்கின் போதும் முதல் ஓவரில் இருந்தே எதோ எழவு விழுந்ததைப்போல் மூஞ்சியை வைத்துக்கொண்டிருந்தார் கோஹ்லி. சமியெல்லாம் ரிட்டையர் ஆகி விட்டார் என்று நினைத்திருந்தேன். புவி, பும்ரா, ஜடேஜா யாரையும் விட்டு வைக்காமல் அனாசயமாக விளையாடினார்கள் ரிஸ்வானும் பாபரும். இந்த அளவுக்கு காம் அண்ட் கம்போஸ்ட் பாகிஸ்தான் டீமை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அய்யா வருண் சர்க்கரவர்த்தி யார் அய்யா நீர்? 

சரி பேட்டிங் பவுலிங் தான் இப்படி இருக்கிறதே பீல்டிங் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், ஒரு காலத்தில் இந்தியா தொடர்ந்தது அடி வாங்கிக்கொண்டிருக்கும் போது, வெங்கடேஷ் பிரசாத், ஸ்ரீநாத் போன்றவர்கள் சும்மா சும்மா கிரவுண்டைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பர். அவர்களாவது பரவாயில்லை வெங்கடபதி ராஜு என்று ஒருத்தர் கோழி பிடிப்பது மாதிரி பந்தைப் பிடிக்க ஓடுவார். அதுவும் பந்து ஓடும் நேர் எதிர் திசையில்.  

இன்று இவர்கள் நியூஸீலாந்துடன் விளையாடிய அழகைப் பார்த்ததும் Sling ஐ அன்சப்ஸ்க்ரைப் பண்ணி விட்டேன். மாசம் பதினைந்து டாலர் மிச்சம். இவர்கள் தடவுவதை நான்  என்ன மயிற்றிர்க்குக் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? 






  

Comments

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15