ரேக்தா

சாருவின் "நான்தான் ஒளரங்கஸேப்" ஒரு  தொடராக Bynge இல் வெளிவந்து கொண்டிருக்கும்போதுதொடர்ச்சியாக சிந்தனையைத் தூண்டிக்கொண்டே இருந்த இடங்கள் சில இருந்தன. அவைகளில் ஒன்றுதான் சுருக்கமாகச் சொன்னால் ஹிந்தி-உருது விவாதம் அல்லது ஹிந்தி-உருது பிரச்சனை. இதைத் தொடங்கி வைத்தால், பல கிளைகளை விரித்துப் படர்ந்து பரவிக்கொண்டே முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கும். இது ஒரு Infinity Puzzle மாதிரியானது



விவாதங்கள் என்றால் மொழி வெறியுடன் அடித்துக்கொள்வதல்ல. இம்மாதிரி விவாதங்கள் மிக அருமையாக, நல்ல முதிர்ச்சியுடன்    Jashn-e-rekhta போன்ற அரங்கங்களில் நடக்கும். அம்மாதிரி விவாதம் சிலவற்றின் காணொளிகள் மேலே நல்கப்பட்டிருக்கிறது. 

சாரு  உர்தூ என்று எழுதுவார். தமிழில் எழுதும்போது அதை உருது என்றுதான் எழுதவேண்டும் என்று விவாதிப்பேன். கொஞ்சம் விவாதித்துவிட்டு அது அவரவர் விருப்பம் என்று இலகுவில் விட்டுவிடுவேன். தமிழில் மற்ற மொழிகளில் உள்ள எல்லா ஓசைகளையும் அப்படியே எழுதுவதும் கடினம். இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் உருது பேசும் முஸ்லிம்கள் கூட  உருது என்றுதான் சொல்வார்கள்ஒரு மொழியின் வார்த்தைகள் வேறொரு மொழிக்குச் செல்லும்போது உச்சரிப்பில் அடையும்  திரிபு சம்பந்தப்பட்டது. தமிழ் என்பதை, மலையாளத்தில் தவிர வேறு எந்த மொழிகளிலும் 'ழ' உச்சரிப்பை எழுதவே முடியாது. மேலும் சில உதாரணங்கள் -

தெலுகு - தெலுங்கு 

கன்னடா - கன்னடம் 

மராட்டி - மராத்தி 

French - பிரெஞ்சு

English - ஆங்கிலம் 

பங்ளா/ பொங்ளா - வங்கமொழி/ பெங்காலி

இப்படி இவற்றையெல்லாம் நாம் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்கமுடியாது.  இதை இந்த இடத்திலேயே நிறுத்திவிடுகிறேன்ஏனென்றால் இது வேறு ஒரு சுவாரஸ்யமான விவாதத்திற்கு இட்டுச்செல்லும்.     

அவர் ஜாதுநாத் சர்க்கார் உட்பட பல முக்கியமான நூல்களையும் மற்றும் குறிப்புக்களையும் உள்வாங்கிக்கொண்டு எழுதியிருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் ஒரு விவாதத்தைத் தொடங்கிவிடவேண்டியிருந்தது அவைகளில் ஒன்றுதான் நான் மேற்சொன்ன ஹிந்தி-உர்தூ விவாதம்.  இது காலம் காலமாக நடந்துகொண்டு வரும் மிக முக்கியமான ஒரு Classical Debate ஆகும்.

மேலெழுந்தவாரியாக ஹிந்தி-உர்தூ Debate என்று சொல்லியாயிற்று ஆனால் உண்மையில் இது

ஹிந்தி- உர்தூ/ உர்தூ/ ஹிந்துஸ்தானி/ ரேக்தா/ ஹிந்தவி/ தெஹல்வி Vs ஹிந்தி

அல்லது

உர்தூ/ ஹிந்துஸ்தானி/ ரேக்தா/ ஹிந்தவி/ தெஹல்வி/ ஹிந்தி Vs உர்தூ

அல்லது

உர்தூ/ ஹிந்துஸ்தானி/  ஹிந்தவி Vs ரேக்தா...

இம்மாதிரி பல Permutations & combinations மற்றும் Comparisons களில் விரிந்து செல்லக்கூடியது.

இது ஒன்றும் திண்டுக்கல் தமிழையும்  மெட்றாஸ் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்குமளவு எளிமையானது அல்ல. ஒரு விதத்தில் நுண்ணோக்கி வைத்துப் பார்த்தாலும், கண்டுபிடிக்கமுடியா நுண்தன்மையும் மற்றோரு தளத்தில்  தொலை நோக்கி வைத்துக்கூட இதன் விஸ்தீரணத்தை அளக்க முடியாது என்பதுதான் உண்மை. இதில் பல கைதேர்ந்த உருது விற்பன்னர்களிடையே கூட கருத்து வேறுபாடுகள் நிலவுவது வெகு சாதாரணம்.

இப்போதைக்குத் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இதை விவாதிப்பதற்கு பர்வீன் சுல்தானா அவர்களை அணுகலாம். வடக்கில் பெரிய விஐபி முகம் என்ற அளவில்தான் ஒருவரைச் சொல்வேன். அது ஜாவேத் அக்தர்!

முதலில் ரேக்தா என்றால் என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

 Etymological ஆகப் பார்த்தால், ஃபார்ஸியில், அதாவது பெர்ஷியன் () பாரஸீக மொழியில் ரேக்தா என்றால் கலவை என்று பொருள். அதே பொருள் படும் வகையில் ஃபார்ஸியை இந்தியாவிலுள்ள வடமேற்கு உத்தரபிரதேசத்தில் பேசப்படும் கடிபோலி என்னும் ஒரு வழக்குமொழியுடன் கலக்கும்போது மெதுமெதுவாக உருவெடுத்த மொழிதான் ஹிந்தி- உர்தூ/ உர்தூ/ ஹிந்துஸ்தானி/ ரேக்தா/ ஹிந்தவி/ தெஹல்வி/ ஹிந்தி. சுருக்கமாகச் சொன்னால், ஒரே மொழி, பல பெயர்கள்.

 இப்போது ஹிந்தி என்று வரும்போது அந்த வார்த்தையே எந்தச் சூழலில் உபயோகப்படுத்தப் படுகிறதோ, அல்லது எந்தமொழியில் ஒருவர் ஹிந்தி என்று சொல்கிறாரோ, அதை வைத்து அதன் பொருளே கூட மாறுபடும். அது வெறும் ஹிந்தி என்னும் மொழியைக் குறிப்பிடும் வார்த்தையே அல்ல.

 உதாரணத்திற்கு -

 "ஸாரே ஜஹான்ஸே அச்சா, ஹின்தோஸித்தா(ங்) ஹமாரா ஹமாரா" என்று போகும் பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். இதை இயற்றியவர் மொஹம்மத் இக்பால் (அ) அலாமா இக்பால் என்பவர், பாகிஸ்தானியர்! அதாவது இன்றைக்கும் பல இந்தியர்களுக்கு தேசீய உணர்வை ஊட்டக்கூடிய பாடலை எழுதியவர் ஒரு பாகிஸ்தானியர். வரிகளும் நல்ல செழுமையான மற்றும் ஆழமான பொருள் கொண்டவை. இந்தப் பாடலின் தலைப்பு "Taranah-e-Hindi". இதன் நேரடிப் பொருள் இந்தியர்களின் தேசிய கீதம் என்று ஆகும். இந்த இடத்தில் ஹிந்தி என்றால் ஹிந்தி மொழியைக் குறிப்பிடுவது கிடையாதுஇறுதியில் "ஹிந்தி ஹெய்ன் ஹம், ஹிந்தி ஹெய்ன் ஹம்" என்று வரும். இதற்குப் பொருள் நாம் இந்தியர்கள், நாம் இந்தியர்கள் என்று சொல்வதாகும்


 இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், "பர்பத் வோ ஸப்ஸே ஊன்ச்சா" என்று வரும். இதில் பர்பத் என்னும் வார்த்தை சமஸ்க்ரித வேர்ச்சொல்லாகும். இது உருது மொழிப் பாடல் என்பதற்காக சமஸ்க்ரிதச் சொல்லுக்கு விலக்கு இல்லை. அதுதான் உருது, அதுதான் ஹிந்துஸ்தானி, அதுதான் ரேக்தா. ஒரே மொழி, பல பெயர்கள்.

 மொழித் தூய்மை பெருகப் பெருகத்தான் ஹிந்தியும் உருதுவும் Standardize செய்யப்பட்டு இன்றைக்கும் ஒரு நூற்றைம்பது வருடங்களுக்குள்தான் அலுவல் ரீதியாக இரு வேறு மொழிகளாயின என்று கொள்ளலாம். வெகு சமீபத்தில்தான் ஹிந்தியும் உருதுவும் தனித்தனியான மொழி என்கிற அடையாளம் பெற்றது. அதற்கும் முன், தேவைக்குத் தகுந்த மாதிரி ஹிந்தியையும் உருதுவையும் ஒரே மொழி மாதிரி பாவிப்பதும் வேறு வேறு மாதிரி பாவிப்பதும் நடந்தது. அதே காலகட்டத்தில், ஹிந்துஸ்தானி மொழி முழுவதுமாக உருவாகிவிட்டது. இன்றைக்கும் டெல்லி, லக்னோ, மீரட், காசியாபாத், லாகூர், கராச்சி போன்ற இடங்களில் பேசப்படும் ஹிந்துஸ்தானி (ஹிந்தி/ உருது () ஹிந்தி-உருது) க்கும் முன்னூறு வருடங்களுக்கு முன் பேசப்பட்ட ஹிந்துஸ்தானிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே ஒரு வித்தியாசம் - ஆங்கிலக்கலப்பு.

 ஹிந்தியும் உருதுவும் ஒரு தேவை கருதித்தான் மிகவும் கடினமாக Standardize செய்யப்பட்டன. ஒரு பக்கம் பாகிஸ்தான் பிரிந்ததும் மிகவும் கவனமாக உருது de-sanskritization செய்யப்பட்டது. மறுபுறம் ஹிந்தித் தூய்மைக்காக ப்ரஜ்பாஷா என்னும் மொழியை அடிப்டையாகக் கொண்டு இதே ஹின்தோஸ்தானியை/ ரேக்தாவை de-perso-arabizasion செய்யும் வேலையை ஹிந்திப் பண்டிதர்கள் முன்பே தொடங்கி விட்டார்கள். ராமாயணம் மஹாபாரதம் போன்ற காவியங்களை மொழி பெயர்ப்பதற்கு, அந்நிய மொழிக் கலவையான ரேக்தாவை கொஞ்சம் தூய்மைப்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயம்  அவர்களுக்கு இருந்தது. அதற்கு தேவநாகரிதான் வரி வடிவம் என்று தீர்மானமானது.

 இன்னும் சொல்லவேண்டுமென்றால், ஒரு அறுபது வருடங்களுக்கு ஹிந்தி சினிமா என்றாலே, அது பாடல்களிலிருந்து வசனங்கள் வரை, கிட்டத்தட்ட எண்பதுகளின் இறுதி வரை, ரேக்தா அல்லது ஹிந்துஸ்தானியில் அல்லது உர்தூவில் எழுதப்பட்டவைதான். ஷுத் ஹிந்தி கிடையாது. முன்பே சொன்னதுபோல், ரேக்தாவில் பெரிதாக ஹிந்தி விலக்கு என்றெல்லாம் இல்லை. இதன் காரணமாக பல அற்புதமான பழைய ஹிந்திப் பாடல்கள் நமக்குக் கிடைத்தன. எழுதியவர்கள் அத்தனை பேரும் உருது லெஜெண்டுகள். வசனங்களும் ஒரு ரஸ்டிக் தன்மையுடன் அடிபொழியாக இருக்கும். உதாரணம் "டான்கோ பக்கட்னா முஷ்கில்ஹி நஹி, மும்கின் ஹே" இதை மெனக்கெட்டு ஷுத் ஹிந்தி ஆக்கினால் "டான் கோ பகட்னா கடின் ஹி நஹி, அஸம்பவ் ஹே". கேட்பதற்கு எப்படி ஒரு பண்டிதத் தன்மையாக இருக்கிறது? இன்னொரு உதாரணம் "மேரே பாஸ் தெளலத் ஹே, ஷெளரத் ஹே, துமாரே பாஸ் க்யா ஹே?" என்பதை ஷுத் ஹிந்தி ஆக்கினால் "மேரே பாஸ்  சம்ப்பத்தி ஹே ப்ரதிஷ்ட்டா ஹே, துமாரே பாஸ் க்யா ஹே?" என்று வரும். எதில் ஒரு கெத்து இருக்கிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நடைமுறையில், அதாவது பேச்சு வழக்கில், யாரும் கடின் என்று சொல்ல மாட்டார்கள், முஷ்கில் என்றுதான் சொல்வார்கள். சம்ப்பத்தி என்று சொல்ல மாட்டார்கள் தெளலத் என்றுதான் சொல்வார்கள்.  (இப்போது புது முயற்சியாக ஹிந்தி கஸல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன, அவைகளும் நன்றாகத்தான் இருக்கின்றன!)

 வட இந்தியாவில் இன்று என்பது வயதை எட்டிய அனைவரும் பள்ளிகளில், உருதுதான் (ரேக்தா/ ஹிந்துஸ்தானி என்ற பெயரில் இல்லாமல்) Nastaliq மூலம் கற்றார்கள். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் இருந்தது. வரலாறு என்று பார்க்கும்போது இவைகளெல்லாம் வெகு சமீபத்திய விஷயங்கள்.

 ஒரு நிமிடம்! இவ்வளவு நேரம் எல்லாம் ஒரே மொழி என்று சொல்லிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஹிந்தியையும், உருதுவையும், ரேக்தாவையும் பிரிப்பதுபோல் இருக்கிறதே என்று கேட்டால், அதுதான் இதில் உள்ள சிறப்பம்சமே. நான் முன்பே குறிப்பிட்டதுபோல், இது சமயத்துக்குத் தகுந்தவாறு மாறும்இதன் காரணமாகத்தான் ஷேவாக்கும் அக்தரும் ஒரு ஷோவில் உரையாடும்போது இருவரும் பேசுவது ஒரே மொழிதான் என்று தோன்றுகிறது. இருவரும் ஒரே மொழியில்தான் பேசிக்கொள்கிறார்களா? இதற்கு விடை ஆம் மற்றும் இல்லை. ஆம் என்பதற்குப் பல காரணங்களும், இல்லை என்பதற்குப் பல காரணங்களும், கிட்டத்தட்ட இவ்விரண்டும் ஒன்றேதான் என்று சொல்வதற்கும் பல காரணங்கள் அடுக்கிக்  கொண்டே போகலாம். பேச்சு மொழியில் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் இவ்விரு மொழிகள், புத்தகங்களில் மற்றும் மேடைகளில் ஒரு பத்து சதவீதம் ப்ரஜ்பாஷா வேர்ச்சொற்களை உபயோகப்படுத்துகிறதா அல்லது பெர்ஸோ-அரபிக் சொற்களை உபயோகப்படுத்துகிறதா என்பதைப் பொறுத்து ஹிந்தியாகவோ உருதுவாகவோ மாறுகிறது. தனித்தனி வரி வடிவம் என்பதைக் குறிப்பிட தேவையில்லை. 

 சரி ஹிந்தி- உர்தூ/ உர்தூ/ ஹிந்துஸ்தானி/ ரேக்தா/ ஹிந்தவி/ தெஹல்வி/ ஹிந்தி போன்ற குழப்பங்களையெல்லாம் விட்டுவிடுவோம். நிகழ்காலத்துக்கு வருவோம். ஒரு எளிமைக்காக ஹிந்தி Vs உருது () ரேக்தா என்று வைத்துக்கொள்வோம். இரண்டும் ஒன்று என்றால் ஒன்றுவெவ்வேறு என்றால் வெவ்வேறு.

 இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் இந்த ஹிந்தி-உருது/ ரேக்தா வெகு சமீபத்திய மொழி  என்பதால், இதற்கு Dialect கள் என்று ஒன்று கிடையாது. உண்மையில் அலுவல்ரீதியாக ஹிந்தி-உருது/ ரேக்தா வுக்கு என்று எந்த Dialect டும் கிடையாது. டெல்லியில் ஒரு விதமாகப் பேசப்படும் ஹிந்தியும், லாஹூரில்/ அம்ரிஸ்தரில் பஞ்சாபி தொனியுடன் பேசப்படும் உருதுவும்/ ஹிந்தியும் த்வனி மாறுபடுவதை வைத்து வெவ்வேறு Dialect கள் என்று சொல்லிவிட முடியாது. இது பெரிதாக Dialect கள் பல இருக்குமளவுக்கெல்லாம் வயதான மொழி கிடையாது. மொழியியலாளர்கள் என்னை வையக்கூடும். ஆனாலும் பரவாயில்லை.

இதில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அதுதான் தக்னி ஹிந்தி-உருது! இது மட்டும்தான்  Dialect வகையில் வரும் (Deccan -> Deccani -> தக்னி) என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை ஆய்வியல்ரீதியாக நிறுவும் அளவு எனக்கு நேரமோ தகுதியோ இல்லை என்பதால், இதை இங்கேயே விட்டுவிடுகிறேன். தக்காணத்தில் பிறந்து தளிர் நடை பயின்று, லக்னோ சென்று பூப்பெய்திய மொழி உருது என்றெல்லாம் செல்லம் கொஞ்சுவது உருது fraternity இல் ஒரு வழக்கம்.

 இந்தக்கட்டுரையை இன்னும் விரித்துகொண்டு சென்று சுவாரசியமாக ஒரு புத்தகம் கூட எழுதலாம். உண்மையில் சில காலமாக நான் எழுத நினைத்த ஒரு தலைப்பு இது. எழுத்தாளன் என்று சொல்லிக்கொண்டு நேரமின்மையை ஒரு காரணமாகச் சொல்லக்கூடாது, ஆனாலும் அது ஒன்றைத் தவிர எழுதாமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை. இக்கருத்துக்கள் யாவுமே எவ்விதத்திலும் என்னுடைய ஸ்திரமான கருத்துக்கள் அல்ல. இது பற்றிய அறிவும், எனக்குக் கிடைக்கும் தகவல்களும் தரவுகளும் மேம்பட மேம்பட, என்னுடைய கருத்துக்களும் முதிர்ச்சி அடைந்துகொண்டே செல்லும் என்று உறுதி அளிக்கிறேன்.

சும்மா சில Fun facts சொல்கிறேன்

* ஈரானில் ஃபார்ஸி என்று பேசப்படும் அதே மொழிதான் ஆப்கானிஸ்தானில் தாரி (Dari என்றும் தஜிகிஸ்தானில் Tajik என்றும் வழங்கப்படுகின்றன. இது கிட்டத்தட்ட ஹிந்தி-உருதுவுக்கு அருகில் வரும் ஒன்று.

எப்படி ஹிந்திக்கும் உருதுவுக்கும் ஒரே Standard Register ஆக Hindustani இருக்கிறதோ, அதே போல் Malay மற்றும் Bahasa-Indonesia போன்ற மொழிகளுக்கு Johr-Riau Malay என்பது Standard Register ஆக இருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ப்ரூனே போன்ற நாடுகள் Malay என்றும் இந்தோனேசியாவில் Bahasa-Indonesia என்றும் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் ஒரு சுவாரசியமான வாசிப்புக்கும், வாசிப்பவரை மேலும் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் மட்டுமே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவைகளில் ஏதாவது கருத்துப் பிழைகள் இருப்பின் அதை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள் Jashn-e-rekhta (உருதுத் திருவிழா) வின் யூட்யூப் வீடியோக்களைத் தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

Comments

  1. Nice ! Got to learn a new perspective of most dominant Indian language. There is a saying -நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது.. இனி மொழி மூலமும் பார்த்தால் அஷ்டடே🤪

    ReplyDelete
    Replies
    1. செமடா நண்பா. ஐ...ஆங்கிலேயர் கார்த்தி தமிழில் எழுதுகிறார்! 🤪

      Delete
  2. மலையாளம் கூட தமிழும் சமஸ்க்ருதமும் கலந்த ஒரு மொழி தான். ஒரு முனையில் கிட்டத்தட்ட தமிழ் போல் ஒலிக்கும் மலையாளம், மறுமுனையில் இதில் எங்கே தமிழ் உள்ளது என்று கேட்க வைக்கும். உருதுவை போல மலையாளமும் தமிழ் (ஹிந்தி) இலக்கணத்தை வைத்து கொண்டு சமஸ்க்ருத (பார்சி - அரேபி) பெயர் சொற்களை ஏற்று கொண்டது.

    1) "மலர்க்கோடி போலே" என்ற ஒரு ஜானகியம்மா பட்டை கேட்டு பாருங்கள் - பெரும்பாலும் தமிழே.
    2) இன்னும் ஒரு படி மேலே - மலையாள சினிமா பாடலாசிரியர்கள் பாரதியார் வரிகளை காப்பி அடித்துள்ளனர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வலியின் கதை

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15