வலியின் கதை

து நடந்து சரியாக ஒன்றரை வருடங்கள் இருக்கும். கொரோனாவெல்லாம் சரியாக முற்றுப்பெற்று ஒர்க் ஃப்ரம் ஹோமான்கள் ஜட்டியுடன் அல்லது அதுவும் இல்லாமல், அதாவது பைஜாமாஸிலோ, லுங்கியுடனோ, கட்டைக் கழிசானுடனோ  மேலே மட்டும் சட்டையோ, தேநீர்ச்சட்டையோ அணிந்துகொண்டு டீம்ஸ் காலில் பங்கேற்றுக்கொண்டிருந்த காலம். நான் மட்டும் தினமும் பணியிடம் சென்று வந்துகொண்டிருந்தேன். நானெல்லாம் கொரோனா வந்த புதிதில் அதாவது இருபதாம் வருடம் மார்ச் இருபத்து மூன்றாம் தேதியிலிருந்து ஏப்ரல் பதினைந்தோ பதினெழோ வரைதான் வீட்டிலிருந்து வேலை. அதற்குப்பிறகு தினமும் அலுவலகம்தான் அவ்வப்போது மட்டும் வீட்டிலிருந்து வேலை/ குறைந்தது பத்து மணி நேரம் வேலை, பிறகு வீட்டுக்கு வந்து வெறிபிடித்த மாதிரி எழுதிக்கொண்டிருந்தேன். அது ஒரு முதல் நாவல் முயற்சி, மொத்தம் முந்நூற்று முப்பத்தைந்து பக்கங்கள் வந்துவிட்டன. தினமும் எழுதுவதை தனித்தனி கோப்புக்களாகச் சேமித்து வைத்திருந்தேன். அடுத்த நாள் அதை ஒரு பிரதியெடுத்து கொஞ்சம் திருத்திவிட்டு, பழைய பிரதியை அழித்துவிடுவது என்று வேலை நடந்துகொண்டிருந்தது. அதற்கிடையில்தான் அந்த சினிமா இயக்குனரின் அறிமுகம் கிடைத்தது. எடுத்தவுடன் மிகுந்த ஸ்னேஹ பாவத்துடன் (ஸ்னேஹா பாவத்துடன் அல்ல), அதாவது நன்கு வெகுநாட்கள் பழகிய உரிமையுடன் பழகினார். முகநூல் வாயிலாக அறிமுகம். தன்னிடம் உள்ள ஸ்க்ரிப்ட்டுகளை மொழிபெயர்த்துத் தரமுடியுமா என்று கேட்டார். தேனொழுகப் பேசுவார். . ஆர் ரஹ்மானுடன் இப்போதுதான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறேன் என்பார்

"நான் சொன்ன ஸ்க்ரிப்டுக்கு  ஓத்துக்கிட்டு யாருமே நடிக்க முன் வரல, டேனியல் பாலாஜி கிட்ட சும்மா கத சொன்னேன் இண்டெர்வெல்லோட சேத்துதான். கேட்ட ஒன்னே நான் பண்றேன் நான் பன்றேன்னு துடிக்கறான் ஆனா அவன் மூஞ்சிய எவன் பாப்பான்? பொர்டீசரு நக்கீட்டு போக வேண்டிதுதான்" என்றுவிட்டு - 

ஸ்க்ரிப்ட்டு தமிழ்ல்ல இருக்கு அத இங்கிலீஸ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணித் தர முடியுமா என்று ஒரு பெரிய படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி கேட்டார்.  

கவனம் - நான் எழுதுவது, ஊரில் எனக்கு அடுத்த வீதியில் இருந்த என் அருமை நண்பர் (இப்போதுதான் அவர் இயக்குனர்) பற்றிச் சொல்லவில்லை. அவரது முதல் படம் கொஞ்சம் சராசரிக்கு மேல் என்ற அளவில் ஹிட் அடித்திருக்கிறது. தங்கம் அவர், வெள்ளந்தி மனசுக்காரர். ஆங்கிலத்தில் குட்டியாக ஒரே ஒரு சினாப்ஸிஸ் மட்டும் எழுதிக்கொடுத்திருக்கிறேன் அவருக்கு. அவ்வளவுதான்.

நான் சொல்வது வேறு ஒருவர் பற்றி. தினமும் சுமார் ஒரு முப்பத்திலிருந்து ஐம்பது பக்கங்கள் கொண்ட, தமிழில் எழுதப்பட்ட -  தமிழ் மீடியத்தில் படித்து, தமிழில் ஃபெயிலாகி டென்த் ஃபெயில் ஆன ஆள் ஒருவன் எழுதிய தரத்தில் ஒரு ஸ்க்ரிப்ட் அனுப்புவார்.  நான் அதைப் படித்துப் புரிந்துகொண்டு, அழகாக ஆங்கிலத்தில் மாற்றித்தரவேண்டும். வாரத்துக்கு ஒன்றல்ல, தினமும் ஒன்று. முழு ஸ்க்ரிப்டும் அதே மயிர் தரத்தில் எழுதப்பட்டிருக்கும் . நான் கால நேரம் பார்க்காமல் சரசரவென தினமும் வேலை நேரத்துக்குப் பின், நாவலைக் கிடப்பில் போட்டுவிட்டு மொழி பெயர்த்து அனுப்பிக்கொண்டிருந்தேன். பிளாக்கில் பொதுவாக ஏதாவது கிறுக்குவது உண்டு. அதுவும் நின்று போய்விட்டது. ஏனென்றால் தினமும் ஐம்பது என்றால், வேலை நேரத்துக்குப்பிறகு நள்ளிரவு வரை ஐந்து அல்லது ஆறு மணி நேரங்கள் செலவு செய்து, அதைத் திருத்துவது மட்டுமின்றி மொழிபெயர்ப்பதும் என்றால், நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். கொஞ்சம் தொடர்பில்லாத விஷயம் என்று தோன்றும் ஆனால் தொடர்பு இருக்கிறது. இப்போதெல்லாம் ஒருவர் எதற்கு அஃபென்ட் ஆகிறார் என்றே தெரிவதில்லை. உதாரணத்திற்கு, வாங்க சும்மா ஒரு வாக் போவோம் என்று அழைத்தால், நக்கல் பார்வையுடன் இல்ல எனக்கு க்ரோகர் போகணும் நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு,

"நான் என்ன கெழ்ட்டுக் கூதியா? என்னய எதுக்கு வாக் கூப்புட்றான்? இவன் கூப்ட ஒன்னே நாங்க போயிரணுமா?"

என்று நம் தலை மறைந்ததும் மற்றவரிடம் சொல்கிறார்கள். நான்கு குடும்பங்கள் கூடும் இடங்களில் தான் மட்டும் ஓட்டை வாய் மாதிரி, எந்த டாபிக் எடுத்தாலும் அதில் தான்தான் பிரஹஸ்பதி என்பது போல், கூமுட்டை மாதிரி, சலசலவென்று பேசிக்கொண்டே இருப்பது அல்லது வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தால் அதில் வம்படியாக இடை மறித்து அகராதி பேசுவது. மற்றவன் தப்பித் தவறி வாய் திறந்து நீங்க சொல்றது கரெக்ட்டு, இருந்தாலும்  நான் என்ன சொல்லவர்றேன்னா, என்று சொன்னால் போயிற்று அதில் அஃபென்ட்  ஆகி, அடுத்த முறையில் இருந்து ஏறெடுத்தும் பார்க்காது போவது, பார்த்தாலும் முறைப்பது, அல்லது எதிலும் நம்மை மட்டும் தவிர்ப்பது என்று சப்பை மேட்டருக்கெல்லாம் அஃபென்ட் ஆவோர்கள். இதெல்லாம் சும்மா மாதிரிக்கு. இது போல் இன்னும் நிறைய இருக்கின்றன. நாம் தும்மினால் அஃபென்ட், தடுக்கி விழுந்தால் அஃபென்ட் என்று இருப்பவர்களைப் பார்த்துப் பார்த்து, நானும் கிட்டத்தட்ட முக்கால் மெண்டல் ஆகிவிட்டேன். பிறகு சுதாரித்து, உலகில் பகுதி நாய்கள் மெண்டல் நாய்கள்தான் என்று பரிதாபப்பட்டு, எந்த நாயிடமும் ரொம்ப நெருங்காமல் மட்டும் பார்த்துக்கொண்டேன்.

குற்றம் பார்த்தால், சுற்றம் இல்லை என்று இவர்கள் மாதிரி சப்பை மேட்டருக்கெல்லாம் அஃபென்ட் ஆகக்கூடாது என்று முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டு கண்டும் காணாமலும் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் அவ்வாறு இருந்தால், தொட்டதுக்கெல்லாம் அஃபென்ட் ஆகும் சல்லிகளுக்குத் தொக்காக ஆகிவிடுகிறது. அவ்வாறு ஆகுபவன்கள் நம்மிடம் போட்டுப் பார்க்கும்போது, மற்றவர்களை போட்டுப் பார்க்கும்போது மட்டும், அது அஃபன்ஸிவ்  கிடையாது. ஆனால் நாம் சும்மா தும்மினால் கூட அஃபென்ஸிவ். என்னிடம் யாராவது தவறாக உரசினால் மட்டும் எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் வெறிநாய் விழித்துக்கொண்டுவிடும். நான் சப்பை மேட்டருக்கு அஃபெண்ட் ஆகும் ஆள் அல்லன் என்பது இதிலிருந்தே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். போடக்கூடாத இடங்களில் நம்மைப் போட்டுப் பார்க்கும்போதுதான் நான் காத்த பொறுமை, பெருந்தன்மையெல்லாம் காற்றில் பறந்துவிடும்.  

அப்படிப்பட்ட அஃபென்டர்தான் அந்த இயக்குனர். முதலில் என்னிடம் வந்து துணை நடிகைகளுடனான  அவரது கில்மா கதைகளை எடுத்துவிட ஆரம்பித்தார். இம்மாதிரி கில்மா கதைகளில் எனக்கு பெரிதாக ஆர்வம் கிடையாது. அதே நேரம் ஒவ்வாமையும் கிடையாது. நான் பல கதைகளையும் பிராதபங்களையும் கேட்டு ரசித்துவிட்டுப் போனதுண்டு. ஆனால் அவையெல்லாம் ஒரு கேளிக்கைக் கூடுகையின் போதோ, சின்ன குடிச்சலம்பலில் போதோ குறைந்தது மூன்று பேருடன் இருக்கும்போது பேசினால் சரி. என்னிடம் நேருக்கு நேர் பேசும்போது அதையெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வைத்துக்கொள்வது நலம்.

"ஹலோ, ஜி மத்தவங்க மேட்டரெல்லாம் எனக்கெதுக்கு ஜி? நீங்க நக்குனதும் ஃபக்குனதும் பத்தி கேட்டு எனக்கென்ன கெடைக்கப்போகுது? ஏங்க மேடைல அவங்களப்பத்தி நெய்யொழுக புகழ்றீங்க, அப்டியே இங்க என்கிட்ட வந்து அவங்களப்பத்தி இப்புடிச் சொல்றீங்களே?. நீங்க சொன்னதெல்லாம் உண்மைன்னு வெச்சுக்கிட்டாலும், உங்க ரெண்டு பேருக்கும் உள்ளது நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளது, அதப்போய் யார் எவருன்னு தெரியாத என்கிட்ட சொல்லலாமா?" என்றேன். அதே சமயம் நா ஒருக்கா ஒரிசா போயிருந்தப்ப, என்று ஆரம்பித்து என்னிடம் சொல்லப்படும் கதைகளைக் கேட்பதிலெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை.       

அவ்வளவுதான்! அடுத்தது மேனிபுலேஷன்.

ஆரம்பத்துல, நீங்க நம்ம அசிஸ்டென்ட் மாரின்னு நெனெச்சேன். அவன் கில்லி, நான் எள்ளுன்னா அவன் எண்ணெய் காச்சி எடுத்துட்டு  வந்து மசாஜ் பண்ணி எனக்கு  உருவி உடுவான். நான் ஃபுல் மப்புல என்ன வேணும்னாலும் அவன்கிட்ட பேசலாம். உனக்கு நட்புன்னா என்னனு தெரியுமா? எதா இருந்தாலும் கொஞ்சம் கூட ஒளிவு மறவு இல்லாம பேச முடிஞ்சாத்தான் நட்பு என்ற ரேஞ்சில் பேசினார். பிறகு ஆமா... நீங்கல்லாம் புத்தரோட மறு அவதாரம் உங்க கூடவெல்லாம் அதெல்லாம் ஷேர் பண்ணக்கூடாது என்றார். எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சொரையாசிஸ், ரேபிஸ் போன்றவை வந்து கொஞ்சம் சரியாகி உறங்கிக்கிகொண்டிருக்கும் சொறி-வெறி நாயை எழுப்பி, அதன் சொறி மீது கல் உப்பு தடவி விட்டது போல் இருந்தது. சரி என்று பொறுத்துக்கொண்டேன். இன்னொரு நாள் போன் செய்து, என் அசிஸ்டென்ட் என்கிட்ட சொல்றான் - "தல உங்க ரேஞ்சுக்கு அவன்கிட்டவெல்லாம் ஏன் சகவாசம் வச்சுக்கறீங்க, அவன் ஆரம்பத்துல இருந்தே சரீல, ஒரு மார்க்கமான சைக்கோ தாயோலியா இருப்பான் போல்ருக்குங்கறான்" என்றார்.

என்னை மெண்டல் தாயோலி என்று இயக்குனரிடம் போட்டுக்கொடுத்த அந்த அல்லக்கை தாயோலி மீது கோபமே வரவில்லை. உள்ளுக்குள் உறங்கும் வெறி-சொறி நாயின் ஆறிய சொறி விதையின் மீது மரக்கால் கல்லுப்பை கொட்டித் தடவியது போல் இருந்தது.  இயக்குனரின் மீது அளவு கடந்த கோபம் வந்தது. ஒரு முறை திட்டுவதற்காக போன் செய்தேன், எடுக்கவில்லை. அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக செஷல்ஸ் தீவுக்குச் சென்றிருந்திருக்கிறார். மெசேஜ் மட்டும் வந்தது நான் பிசியாக இருக்கிறேன் என்று. என் ரத்தக்கொதிப்பு ஏற, ஒன்றரை  நிப்புகள் பிளெண்டெட் குடித்துவிட்டு வாய்ஸ் மெசேஜில் என்ன திட்டினேன் என்றே தெரியவில்லை. திட்டினேன். நான் ப்ளெண்டட் குடிப்பதே இல்லை. எப்போதும் சிங்கிள் மால்ட்தான். இப்போது எதுவுமில்லை.  

இதற்கே இன்னும் வெறி அடங்கவில்லை. நான் ஒருவரை திட்டுகிறேன் என்றால் அது வெறும் சாதாரணக் கோபம்தான் என்று புரிந்துகொள்ளலாம். அதற்குப்பிறகு அவர் செய்த அஃபென்ஸ்தான் இன்னும் பெரிது -

நான் என் நாவலை விட்டுவிட்டு, இவருக்கு பிழை திருத்தியும், மொழி பெயர்ப்பு வேலையும் மணிக்கணக்கில் காலம் மறந்து ஒற்றைக்குறிக்கோளுடன் செய்ததில்  இரு விஷயங்கள் நடந்தது. ஒன்று முதன் முறையாக முழுக்குத்தண்டில் பொறுக்க முடியாத வலி வந்தது. பத்து நிமிடங்கள் உட்கார்ந்தும், பத்து நிமிடங்கள் நின்றெல்லாம் எழுதினேன். என் நாவலுக்கு உட்காரும்போது, நள்ளிரவு கடந்து இன்னும் வலியும், களைப்பும் சேர்ந்துகொண்டு தரையில் குத்த வைத்து உட்கார்ந்து முக்காலி மேல் கணினியை வைத்தெல்லாம் எழுதினேன்.  அந்தளவு பொறுத்துக்கொண்டு நான் அவருக்கு வேலை செய்து உதவியதற்குக்  காரணம் அவர் கொடுத்த சில ஸ்க்ரிப்டுகள் அருமையாக இருந்தன. ஒரு அற்புதமான "ரேக்ஸ் டு ரிச்" கதையும், மனத்தைக் கரைக்கும் அமரக் காதல் கதையும் இருந்தன. ஸ்க்ரிப்டில் பல இடங்களில் குறிப்புக் கொடுத்து, வசனங்கள் கூட எழுதினேன்.

நான் இவ்வளவு உயிரைக்கொடுத்து எழுதிக்கொடுத்தால், நீயெல்லாம் ஆளு மயிறு இதெல்லாம் ஒரு ஒர்க் மயிறு என்று என்னை மட்டம் தட்டுவதற்காக, அதை நேரடியாகச் சொல்லியிருந்தாலும்  நான் சண்டை போட்டு பிறகு சமாதானமும் ஆகியிருப்பேன், ஆனால்,  இதுதான் க்ளாஸிக் அஃபென்டிங் என்பது. மரணக்குத்து, வாயை மூடிக் கழுத்தை அறுப்பது என்பது -  

அவர் என்னிடம் செய்த கடைசி அஃபென்ஸ் என்னவென்றால், என்னை நேரடியாகக் குறிப்பிடாமல்,  துபாய்ல என் ரசிகை ஒருத்தி, லண்டன்ல ஸ்க்ரீன் ரைட்டிங் படிச்சவ ஒருத்தி, எழுதுவா பாருங்க? சும்மா எப்பிடி இருக்கும் தெரியுமா? நான் சும்மா அவுட் லைன் சொன்னா போதும் மொத்த ஸ்க்ரிப்ட்டையும் எழுதிட்டு, துபாய்ல புருஷன உட்டுட்டு சொந்த செலவுல சோழால ரூம் போட்டுட்டு நம்மள டிஸ்கஷனுக்கு கூப்புடுவா. நமக்குன்னு தானா வந்து வுழுகுது பாருங்க... என்று நக்கலாக சிரித்துக்கொண்டே போனில் சொன்னார். 

பிறகு என் வெறி-சொறி நாய்க்கு வெறி முற்றி உன்மத்தம் பிடித்துக்கொண்டது. அவரை நன்கு அவரது அல்லக்கையின் வாய் முஹூர்த்தத்துக்குத் தகுந்தவாறு ஊமைக்குத்து குத்திவிட்டு வந்தேன். அதில் அல்லக்கைக்கு படு சந்தோஷமாம், "நான் சொல்ல? நான் சொல்லல? அவன் சைக்குத் தாயோலின்னு நான் சொல்ல?” என்று படு குஷியாம்

நான் குத்திய குத்தில் இப்போதெல்லாம் யாரையும் நம்பி சாதாரண காஸிப் கூடப் பேசுவதில்லையாம். துணை இணை நடிகைகள், அசிஸ்டென்ட்டுகள் என்று அனைவரையும் மேடைக்கு மேடை, அவர் என் மகள் மாதிரி, என் சகோதரி மாதிரி என்றெல்லாம் பேசிக்கொண்டு அலைகிறார். நீங்கள் சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களில் அவரது புதுப்பட ப்ரோமோஷன்களில் பார்த்தாலே தெரியும். நான் கொஞ்சம் ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து எழுதிக்கொடுத்த கதைதான் இப்போது பெரிய நிறுவனத்தின் மூலம் படமாகி, சமீபத்தில் ஹிட் அடித்திருக்கிறது. 

உயிர் போகும் இடுப்பு மற்றும் கீழ் முதுகு வலி ஒரு புறமென்றால், கிரேவ் யார்டு ஷிஃப்டில் தூக்கக் கலகத்தில், ஒரு முறை நான் எழுதிய நாவலின் கோப்புக்கள் மொத்தத்தையும் ஷிஃப்ட் டெலிட் அடித்துவிட்டேன். நான் பொதுவாக அழிக்கவேண்டும் என்று எடுத்து வைக்கும் கோப்புக்களை ஒரு சப் ஃபோல்டரில் போட்டுவைத்துவிட்டு, ஒரு நல்ல வெர்ஷன் இருக்கிறது என்று திண்ணமாகத் தெரியும்போது பழையவற்றை ஷிஃப்ட் டெலிட் அடித்துவிடுவேன்.  பிறகு ரெகவரி செய்ய என்னென்னவோ முயன்றும் ஒன்றும் முடியாமல் போனது. கிட்டத்தட்ட முந்நூற்றைம்பது பக்கங்கள் போனது போனதுதான். அடுத்த நாள் மீண்டும் உட்காரும்போதுதான் அது எனக்கு உரைக்கவே செய்தது. தலை சுற்றி நிலம் வழுக்கி, யாரோ என்னை சம்மட்டியால் தாக்கியது போல் இருந்தது. ஒரு வாரம் பித்துப் பிடித்து அலைந்தேன். இதற்குப் பிறகு முதுகும் ஒத்துழைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் பிளாக்குக்காக கட்டுரை எழுதும்போதும் வலி உயிர் போய் உயிர் வந்தது. எழுத உட்கார முடியாத அளவு சித்தரவதை தரும் வலி. கீழ் முதுகுத்தண்டில் ஆரம்பித்து இடது புட்டத்தின் வழி, தொடை வரை கத்தியால் குத்துவது போல் வலி. தொடையும் இடுப்பெலும்பும் சேருமிடத்தில் வீக்கம். அதிலிருந்து புனைவுகள் எழுதுவதை விட்டுவிட்டேன். ஏனென்றால், புனைவு எழுதவேண்டுமென்றால், ஒரு தனி தவநிலைக்குச் சென்று அந்த உலகத்துக்குள்ளேயே இருந்து  வெளியேறும்போது பத்திரமாகப் படைப்புடன் வெளியேறவேண்டும். இன்றைக்கு பத்து வரி நாளைக்குப் பத்து வரி என்று எழுத முடியாது. அவ்வப்போது முகநூலில் நக்கல் கமெண்ட்டுகள் போடுவதுடன் ஆறுதல் அடைந்துகொண்டேன்.

பத்துப் பதினைந்து பக்கங்கள் வரும் கட்டுரை ஒன்றை எழுதி முடிக்க ஐந்து மணிநேரங்கள் ஆனது, வலியுடனான ஐந்து மணிநேரங்கள் (உதாரணத்திற்கு ஆப்பன்ஹைமர் கட்டுரை பிசிறு நீக்குதலுடன் சேர்த்து ஐந்தரை மணிகள் பிடித்தன). அலுவல் நேரம் பத்துப் பதினோரு மணிகள் தவிர.  

தற்போது கடந்த ஒரு மாதமாக, வலி உச்சத்துக்கு சென்று, மருத்துவரிடம் சென்று பார்த்தால், முதுகுத்தண்டுவடத்தில் L5 என்னும் வட்டில் பிரச்சனை. அதுவும் அதற்குக் கீழே உள்ள S1 என்னும் கீழ் வட்டும்  வட்டுச்சவ்வுடன்  சேர்ந்து நரம்புகளையும் கவ்விக்கடிப்பதால் வரும் பிரச்சனை. மருத்துவர் உணர்ச்சியே இல்லாமல் அமெரிக்க ஆங்கிலத்தில் அவ்ளோதான் என்ன பண்ண முடியும், இப்போல்லாம் இது ரொம்ப காமன் என்று சொல்லி முடித்துக்கொண்டார். இந்தியர்தான், புலம்பெயர் இந்தியரும் கிடையாது. இங்கு வந்து மருத்துவம் பயின்று மருத்துவம் செய்கிறார் போலும். அவரது உச்சரிப்பில் லேசாக அங்காங்கே இந்தியத்தனம் எட்டிப்பார்த்தது.  

மருத்துவர் என்று சொன்னதும் ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. நான் மும்பையில் இருக்கும்போது என் உள்ளூர் நண்பன் ஒருவன். அவனது அண்ணன் யுனானியா ஆயுர்வேதமா என்று சரியாக நினைவில்லை

திடீரென்று ஒருவனைக் காட்டி - அதோ போறாம் பாரு அவுனுக்கு மூலம் திராட்ச கொத்து மாதிரி பின்னாடி இருந்து கொட்டைக்கி கீழ வரைக்கும் தொங்கும் தெரியுமா? என்றான்

நான் அதிர்ச்சியில் உறைந்து அடேய் அது உனக்கு எப்புடிடா தெரியும்? என்றேன்.  அப்போதுதான் அவன் அண்ணன் மருத்துவன் என்பதே தெரியும். அவுனுக்கு சரியாகாது, ஆகவே ஆகாது என்றான். ஏனென்று கேட்டால், ஒரு முறை அவன் கக்கத்தில் சிறிதாக ஒரு கட்டி மாதிரி வந்து அது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, டப்பென்று உடைந்து படையாக மாறியது. காட்டாத இடமே இல்லை எந்த ஆங்கில மருத்துவராலும் குணப்படுத்தமுடியாமல் போகவே, இவனது அண்ணனிடம் வந்திருக்கிறான். அண்ணன் படை, சொறி, படர்தாமரை போன்றவற்றில் நிபுணன். ஒரே வாரத்தில் குணப்படுத்திவிட்டான். குணமானவன் வேறு வேலைகளில் மும்மரமாகிவிட்டு, தனக்கு குணமானதைச் சொல்லி நன்றி சொல்லவில்லையாம். இது நடந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டதாம். இப்போது மூலத்துக்கு வந்து பார்த்திருக்கிறான். மருந்து கொடுத்திருக்கிறான் நண்பனின் அண்ணன். பதினைந்து நாட்களுக்குக்கான மருந்தின் விலை ஏழாயிரத்து ஐநூறு. அதுவரை பத்துப்பதினைந்து முறைகள் மருந்து வாங்கி சாப்பிட்டிருப்பான். ஒன்றும் சரியாக வில்லை. லேசாகச் சந்தேகம் வந்து அதைச் சோதித்துப்பார்த்தால் அது வெறும் சுக்கு மிளகு இந்துப்பு கலந்த தூள்களை உருண்டை உருண்டையாக உருட்டி குளிகைகள் செய்து கொடுத்து அனுப்பியிருக்கிறான். எனக்கு நீங்கள் இப்படிச்செய்யலாமா என்று புலம்பிக்கொண்டே கேட்டதற்கு, அடேய் செய்ந்நன்றி கொன்று நீ குணமானதை எனக்குச்சொல்லாமல் போனதற்கான தண்டனை. நன்றி கெட்ட நாயே  உனக்கு மருந்து கொடுக்க முடியாது என்று சொல்லி விரட்டிவிட்டானாம் இவனது அண்ணன். எனக்கு குபீரென்று யாரோ அடி  வயிற்றில் கத்தியால் குத்தி குலை சரிந்தது போல் அதைக் கேட்டு ஈரக்குலை நடுங்கிவிட்டது. அருவருப்பில் குமட்டிக்கொண்டு வந்தது. அன்றோடு அவன் நட்புக்கே முழுக்கு.  ஒருவன் கொலைகாரனாகவே இருந்தாலும் மருத்துவருக்கு அவன் ஒரு நோயாளி அவ்வளவே, ஒருவருக்கு எதை மறுத்தாலும் மறுக்கலாம் ஆனால் மருந்தை மட்டும் மறுக்கக்கூடாது என்றெல்லாம் வாசித்தும் திரைப்படங்களில் பார்த்தெல்லாம் வளர்ந்ததாலோ என்னவோ எதார்த்த உலகம் பற்றித் தெரியாமல் போய்விட்டது. இங்கு எல்லாமும் அதிகாரம், ஒரு நோய்க்கூறுக்கு மருந்து என்ன என்று தெரிந்துகொண்டே அதை நோயாளிக்கு அளிக்காமல் இருப்பதுவும் அதிகாரமே என்றெல்லாம் தோன்றியது. மருத்துவன் மட்டும் ஆகாயத்திலிருந்தா குதித்திருக்கிறான்? அவனும்  வஞ்சகமும் குயுக்தி எண்ணங்களும் கொண்ட சாதாரண ரத்தத்தினாலும், சதையினாலுமான, வெறும் பணத்துக்கு வாயைப் பிளக்கும் பிணம்தானே?  என்றெல்லாம் தோன்றியது. எனக்கு தோன்றி என்ன பயன்? இம்மாதிரி ஈன மருத்துவத் தேவிடியாப்பயல்கள் மாறப்போகிறார்களா என்ன

இங்கு மருத்துவர் தண்டுவடப் பிரச்னைக்கு, வலிக்கு ஸ்டெராய்டு எடுத்துக்கொள் என்று கொடுத்திருக்கிறார். அதை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு வாரம் ஐயோ ஸ்டெராய்டா!? இந்த உடலுக்கு இயற்கை மருந்தைத்தவிர வேறு எதையும் கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தேன். பிறகு யோசித்துப்பார்க்கையில், ஸ்டெராய்டு என்பது என்ன? அதுவும் இந்த அண்டத்தின் ஒரு பகுதிதானே? அண்டத்தில் இருப்பதுதானே இப்பாழும் பிண்டத்திலும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது? நாம் இங்கு வந்ததும் நம்மால் இல்லை, இதில் உயிரும் உணர்வும் ஒட்டிக்கொண்டிருக்கபோவதோ இன்னும் சில வருடங்கள். இதை அவ்வளவு பொத்திப் பாதுகாத்து என்ன செய்ய? கூடவே கொண்டுசெல்லவா போகிறோம்? என்று சமாதானம் செய்துகொண்டு நான் சொந்தம் கொண்டாடத்தேவை இல்லாத பிண்டத்துக்குள் ஸ்டெராய்டை அனுப்பி வைத்திருக்கிறேன் பார்க்கலாம்

நடுநடுவே கைரோபிராக்டரிடம் சென்று வருகிறேன் அவர் தொடையைப் பிடித்துத் திருப்பி *நெடக்கி எடுத்துவிடுகிறார். தன் இளம் பெண் உதவியாளரிடம் என்னை ஒரு படுக்கையில் கட்டிப்போட்டு, டார்ச்சர் பண்ணைச் சொல்கிறார். ஒரு முறை சென்று வர ஐம்பது டாலர்கள். கண்ட கண்ட பிறழ்வுச் சனியன் கதைகளைப் வாசித்துவிட்டு மஸாக்கிஸ்ட் என்றெல்லாம் நீங்கள் நினைக்கத்தேவையில்லை.  இது ஒரு மருத்துவப்படுக்கை. இந்த முறைக்குப் பெயர் Non Surgical Spinal Decompression. என்னை அப்படுக்கையில் கிடத்தி, பெண் இளம் உதவியாளர் மார்ப்பைச்சுற்றி ஒரு பட்டைய அணிவித்து இறுக்கிக் கட்டுவார், பிறகு புட்டத்தைத் சுற்றி ஒரு பட்டை. பிறகு இடைக்கால ஐரோப்பியச் சித்தரவதை. மேல்பட்டை மார்பை இறுக்கிப்பிடிக்க, கீழ்ப்பட்டையபிடித்து நூற்றி இருபது பவுண்டு இழுவை. பிறகு பிடி தளர்த்தி மீண்டும் இழுவை. பிறகு  இடுப்பெலும்பில் சுறுசுறுவென்று சுள்ளெறும்புகளை விட்டுக் கடிக்கவைத்ததுபோல் . எம். எஸ் சாதனத்ததால் குறை அழுத்த மின்சாரம் பாய்ச்சுதல்.    

முன்பெல்லாம் நள்ளிரவு தாண்டி  உறங்கினாலும்  அதிகாலையில் எழுந்தவுடன் இருபத்தைந்து புஷ் அப்புகளும் இருபது சூரிய நமஸ்காரங்களும் செய்துகொண்டிருந்தேன். பல மாதங்களாக அது விட்டுப் போய்விட்டது.  

யார் என்ன சொன்னாலும் எனக்கு மட்டும் சூரியன்தான் பகவான்

மன்னனிடம் பழகும்போது ரொம்ப நெருங்கிவிடக்கூடாது என்பதற்கு வள்ளுவர் -

 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

 இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார் 

என்று எழுதி வைத்தார். அதே போல் சூரிய பகவானும் அகலாது அணுகாது மிகச்சரியாக அதே இடத்தில் நின்று வெப்பத்தை அளிப்பதால்தான் பூமியில் இங்கு கண்ணுக்குத் தெரியாத ஆல விதைக்குள்ளிருக்கும் பீஜத்திலிருந்து விருட்சம் முளைத்தெழுகிறது.


இன்று அதிகாலை குளிரில் நடுங்கிக்கொண்டே, மரங்களுக்குள் சென்று ஒழிந்து போய்விட்டேன். உதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

ஸூர்யம் சுந்தர லோகநாத மம்ருதம்

வேதாந்த ஸாரம் ஷிவம்

ஞானம் பிரம்ம மயம் ஸுரேஷ  மாமலம்

லோகைக சித்தம் ஸ்வயம்

இந்த்ராதித்ய நராதிபம் ஸுரகுரும்

த்ரைலோக்ய சூடாமணியம்

ப்ரும்மா விஷ்ணு ஷிவஸ்வரூப ஹ்ருதயம்

வந்தே ஸதா பாஸ்கரம்       

ஸூர்ய நமஸ்காரம் செய்யும் போது முதுகுத்தண்டு வலி உயிர் போனது. நம்பிக்கை இருக்கிறது, பகவான் காப்பாற்றி விடுவார். ஐயோ இந்த வலி அந்த இயக்குனருக்குக் கூட வரக்கூடாது.

அருஞ்சொற்பொருள்:

*நெடக்கி = சொடக்கு

Comments

Popular posts from this blog

Jawan - An Inimitable Experience

நடுகல் இதழ் 15